Saturday, February 8, 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சமயநல்லிணக்கக் கருத்தரங்கு







பன்னாட்டு மதச் சுதந்திரக் கூட்டமைப்பின் தமிழகக் கிளையின் சார்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டமும் இணைந்து 6.2.14 அன்று கல்லூரி உரையரங்கில் பல்சமயக்கருத்தரங்கினை நடத்தின.கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் தலைமையுரை ஆற்றினார். பன்னாட்டு மதச் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் பி.டி.சிதம்பரம் வரவேற்றுப் பேசினார்.தேசியப் பொருளாளர் முனைவர் பி.அருள்செல்வம் கூட்டமைப்பின் வரலாறு குறித்துப் பேசினார்.
இந்துசமயம் குறித்து பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்.ச.மகாதேவன் சிறப்புரையாற்றினார்.இஸ்லாம் குறித்து சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஏ.அஸ்ரப் அலி சிறப்புரையாற்றினார்.கிறித்தவம் குறித்து டவுன் பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனி குருஸ் சிறப்புரையாற்றினார்.பிற சமயங்கள் குறித்து என்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.
திருநெல்வேலி முஸ்லீம் அனாதை நிலையத் தாளாளர் அல்காஜ் எம்.கே.எம் கபீர்,தென்காசியைச் சார்ந்த பி.ஆர்.சுப்ரமணியராஜா,திருநெல்வேலி லிட்டில் பிளவர் பள்ளியின் தாளாளர் மரியசூசை,நாகர்கோவில் கிளையைச் சார்ந்த  முனைவர் கே.சிதம்பர நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.திருநெல்வேலி பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சார்ந்த பிரம்ம குமாரி சீதாதேவி பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.வெங்கடாசலம் நன்றி கூறினார்.நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் பாதுஷா, பேராசிரியை கண்ணா முத்தையா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

படத்தில்:பாளை. பன்னாட்டு மதச் சுதந்திரக் கூட்டமைப்பின் தமிழகக் கிளையின் சார்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டமும் இணைந்து நடத்திய சமயநல்லிணக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்க்கு சான்றிதழ் வழங்கும் பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சார்ந்த பிரம்ம குமாரி சீதாதேவி அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் மற்றும் பலர்.

செய்தி:முனைவர் ச.மகாதேவன்,

Friday, February 7, 2014

திருநெல்வேலி மாநகரக்காவல்துறை நடத்திய “சாதிக்கப்பிறந்தவர்கள்” வழிகாட்டுதல் கருத்தரங்கம்



‘’ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்குவிற்பவனும் தேக்கு விற்பான்’’  எனக்குப்பிடித்த அருமையான பொன்மொழி.இளைய சமுதாயத்திற்கு இன்று மிகவும் தேவையானது ஊக்கப்படுத்துதலும் உற்சாகப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படவைப்பதும்தான்.
 
தூய சவேரியார் கல்லூரி மாணவனாக நான் பயின்றபோது என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்த அருட்தந்தை இன்னாசிமுத்து அவர்கள், அருட்தந்தை ஆல்பர்ட்முத்துமாலை அவர்கள், அருட்தந்தை பிரான்சிஸ் எம்.பீட்டர் அவர்கள், அருட்தந்தை லூர்துசாமி அவர்கள்,பேராசிரியர் சிவசு அவர்கள், பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்கள்,போன்றவர்களின் வழியில் நடந்துகொண்டிருக்கிறேன்.

கல்லூரி மாணவ மாணவியர் அளப்பரிய ஆற்றலைத் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கிறார்கள்.தூண்டுகோலாக நாம் இருந்தால் போதுமானது.நேற்று இரவு வீட்டில் இருந்தபோது காவல்துறையிலிருந்து தொலைபேசி அழைப்பு,”நாளை காலை திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் மாநகரக்காவல்துறை சார்பாக மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நீங்கள் “சாதிக்கப்பிறந்தவர்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற வேண்டும் என்று காவல்துறையின் திருநெல்வேலிமாநகர உதவிஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன் ஐ.பி.எஸ் விரும்புவதாகத் தெரிவித்


தார்கள்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.காவல்துறை ஒரு நல்ல காரியத்தை முன்னெடுத்துச் செய்யும்போது நாம் உதவிக்கரம் நீட்டாமல் இருக்கமுடியுமா?கடந்த பத்தாண்டுகளாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆற்றுப்படுத்தும்குழுவில் இடம்பெற்று திருநெல்வேலி மாவட்டத்தின் பலபகுதிகளுக்குச் சென்றுவந்துள்ளேன்

.சமீபத்தில் திருநெல்வேலியில் கல்லூரிகள் பள்ளிகளில் சாதிமோதல்கள்,வன்முறைகள் நடைபெறுகின்றதே இதை எப்படித் தடுப்பது? என்று ஒரு நாளிதழ் செய்தியாளர் தொலைபேசியில் பேட்டிகண்டார்.பதின்பருவத்தில் இருக்கும் இளையோருக்குத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் இருப்பது இயல்புதான்.அவர்களைச் சில அமைப்புகள் தவறாகப் பயன்படுத்திக் கல்விநிலையங்களில் மோதல்களை உருவாக்கிவிடுகின்றன.அந்த இளையோரை  ஆற்றுப்படுத்தி “நீங்கள் சாதிக்காய் பிறந்தவர்கள் இல்லை சாதிக்கப்பிறந்தவர்கள் “என்று பக்குவமாகச் சொன்னால் அவர்கள் நிச்சயமாகக் கேட்பார்கள் என்று பேட்டி தந்திருந்தேன்.

அதனால்  “சாதிக்கப்பிறந்தவர்கள்” என்று காவல்துறையின் திருநெல்வேலி உதவிஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் தந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.


நான் முனைவர் பட்டம் பெற ஆய்வுசெய்த கல்லூரியாயிற்றே மதிதா இந்துக் கல்லூரி.மகாகவி பாரதியாரும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரும்,சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனும்,தொ.மு.சியும்,தி.க.சியும் பயின்ற கல்லூரியில் மாணவர்களிடம் பேசுவதென்றால் மனம் மகிழத்தானே செய்யும்.கல்லூரி மாணவமலர்களால் நிரம்பி வழிந்தது.


 காவல்துறையின் திருநெல்வேலிமாநகர உதவிஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன் ஐ.பி.எஸ் மிகஇயல்பாக கல்லூரிக்குள் நுழைந்தார்.இளைஞர் முப்பது வயதிற்குள் இருக்கும்,வேளாண்துறையில் முனைவர் பட்டம் பெற்ற வேளாண்விஞ்ஞானி ,மாணவர்கள் மீது அன்பு செலுத்தினார் வெற்றிப்படிக்கட்டுகளில் மாணவர்களை ஏற்றிப்பார்க்கும் ஆவல் அவருள் இருந்தது.நிகழ்ச்சியை மதிதா இந்துக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் அருமையாய் ஒழுங்குசெய்திருந்தனர்.

 பேராசிரியர் கா.நீலகண்டபாபு வரவேற்றுப் பேசினார்.


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.ராஜாங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

 மதிதா இந்துக் கல்லூரி முதல்வர் முனைவர் பி.சின்னதம்பி தலைமையுரை ஆற்றினார்.தமிழ்த்துறைப் பேராசிரியர் சுந்தரம் உணர்ச்சிகரமாய் பேசினார்.

சமுக ஆர்வலர் இரா.சந்தானம்,பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

காவல்துறையின் திருநெல்வேலிமாநகர உதவிஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன் ஐ.பி.எஸ் இளமைப்பருவத்தில் வழிதவறிப் போன இளைஞர்கள் சட்டத்தின் பார்வையில் எவ்வாறு குற்றவாளிகளாய் மாறுகிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.


அரைமணிநேரம் மாணவர்களிடம் பேசினேன்.மிகக்கவனமாகக் கேட்டார்கள்.அவர்கள் நிச்சயமாய் வேடிக்கை மனிதர்கள் இல்லை.


சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி