Saturday, October 26, 2013

பொன்னமராவதி எனும் பொன்னான பூமி


நினைவுகள் சுகமானவை நடப்புநிகழ்வுகளில் இருந்து தப்பிக்க உதவும் தற்காலிகச் சொர்க்கம் என்றுகூடச் சொல்லமுடியும்.
 
பேருந்துப் பயணங்கள் கூடச் சிலநேரங்களில் நினைவுகளின் தொட்டிலாக அமைந்துவிடும்
 
.தாயாரின் ஆதிமண் பொன்னமராவதி.முப்பத்துமூன்று ஆண்டு நினைவுப் பதியன்கள் போட்ட இடம்.
 
மதுரையிலிருந்து சிங்கம்புணரி சென்று ஆ.தெக்கூர் கடந்து சிதம்பரம் ரோடுவேஸ் நெற்குப்பை தாண்டியஉடன் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.
 
"அழகுநாச்சியம்மன் பொன்னமராவதி"
.....................................................................................

ஊருணி பெருவட்டமாய் நிரம்பி வழியும்.பரியாமருதுபட்டி பச்சை வயல்களும்,அரண்மனை போன்ற செட்டிநாட்டு வீடுகளும்,நல்லதண்ணீர் எடுக்கும் சேங்கைகளும்,ஆலமரத்தடியும் கிராமம் காக்கும் அழகுநாச்சியம்மன் திருக்கோவிலும் கருப்பரும் வாசலில் நிற்கும் பிரமாண்டமான குதிரைகளும் ,அமரகண்டான் ஊருணியும்,பட்டமரத்தான் கோவிலும் சாரைசாரையாய் அகக்கண்முன் ஒளித்துகள்களாய் வந்து மோதிச்செல்லும்.
"அழகுநாச்சியம்மன் பொன்னமராவதி"
........................................................................................
 
முழுப்பரீட்சை லீவுக்கு வரும் தன் பேரன்பேத்திகளை வரவேற்கப் பரபரப்பாய் பஸ்ஸ்டாண்டில் காமாட்சிப்பாட்டி காலையிலிருந்தே காத்துக்கிடப்பாள்.
 
பாட்டி வீடு மலையான் ஊருணிக்கருகில் கல்செக்கு ஓடும் சிதம்பரம்செட்டியார் சந்தில் இருக்கும்.
 
குடிசைவீடு,மண்தரை மின்விளக்கு கிடையாது.
 
வாசலில் கிடக்கும் கல்பெஞ்சில் அமர்ந்தபடி நிலாவெளிச்சத்தில் பாட்டி எங்களோடு பேசுவதே 
 
தனிஅழகு.நாட்டுமருந்துக் கடைக்கு போய் நறுக்குமூலம் வாங்கி ஊருக்கு பயணித்த அலுப்புதீர ரசம் வைத்து ஆனந்தக்கண்ணீருடன் தையல்இலையில் உணவு பரிமாறுவாள்.காலைப்பொழுது வந்துவிட்டால் கேணிக்கருகில் அழைத்துச் சென்று தண்ணீர் சேந்தி ஊற்றிவிட்டு வேப்பஇலை மார்கோ சோப்புபோட்டுத் தேய்த்து விடுவாள்
 
.செவ்வாயும்,சனியும் வாரச்சந்தை.நுங்கும்,நீர்மோரும் வயிருமுட்டத் தருவாள்
 
.பாட்டி அரிக்கேன் விளக்கின் காண்ணாடியை விபூதி போட்டு பழைய துணியால் துடைத்துப் பளிச்சென்று ஆக்கிஎரிய வைப்பாள்.நாட்டுக்கல் அருகிலுள்ள வாசகசாலைதான் எங்களின் ஒரே பொழுதுபோக்கு
 
.கோகுலம்,அம்புலிமாமா,காமிக்ஸ் கதைகள் படிக்கத் தொடங்கியது 
 
அங்கேதான்,எப்போதும் நீர்அலைமோதும் அழகான அமரகண்டான் ஊருணிக்கருகில் வாசகசாலை என்பதும்,எந்த நூலையும் உடனே எடுத்துத்தரும் லைப்ரேரியன் மலையாண்டி அய்யா இருந்ததும் நிறைய வாசிக்கத் தூண்டின.
 
 லைப்ரேரி விட்டு வெளியே வந்தஉடன் அழைத்துச் செல்லப்பாட்டி வந்திருப்பாள்
 
.வரும்வழியில் கலர்கலர்க் கண்ணாடிகள் பூட்டிய பலகாரவண்டியில் அல்வாவும் சோமாசியும் வாங்கித்தருவாள்.நிறையக்கதை சொல்வாள்.















இன்னும் ....
சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி

No comments: